விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரை, துரத்திச் சென்று மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். காவேரிப்பாக்கம் ஏரிக்கரை ரைஸ்மில் அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய நால்வரையும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 90 போதை மாத்திரைகள், இன்சுலின், 3 செல்போன்கள், 16 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.