காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, கள்ளத்தனமாக மது விற்பனை செய்த மாற்றுத்திறனாளி பெண் தற்போது திருந்தி மது விற்பனை செய்யாததால் அவரது கணவருக்கு முன்பணம் செலுத்தி ஆட்டோ வாங்கி கொடுத்த மணிமங்கலம் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குத்தனூர் பகுதியை சேர்ந்தவர் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி. இவரது கணவர் சுரேஷ் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமான முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த ஸ்டெல்லா மீது 6 முறை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்டெல்லா மேரியை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல்நிலைய உளவுத்துறை காவலர் மதுசூதன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். அதன் பேரில் கடந்த மூன்று மாதங்களாக திருந்தி வாழ்ந்து வந்துள்ளார். மேலும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வசதி ஏற்படுத்தி தரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் பேரில், அவரது கணவருக்கு மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் ரூ.50,000 முன் பணமாக செலுத்தி புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை வழக்கு பதிவு செய்து காவலர்கள் சிறையில் அடைத்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் ஆய்வாளர் அசோகனின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது