Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 10:37 AM
By: Manigandan Raja
நெய்வேலியில் உள்ள NLC நிறுவனத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு, சாம்பல் கழிவுகளை எடுத்தபோது அதனுடன் சேர்த்து 70 ஆயிரம் டன் செம்மண் எடுத்து சென்றது அம்பலமாகியுள்ளது. NLC நிர்வாகத்தில் நடப்பது என்ன? ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது எப்படி? சிபிஐ விசாரணை கோரியது ஏன்? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள NLC நிறுவனத்தில் பல்வேறு பணிகளில் 442 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வரை புகார் சென்ற நிலையில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடலூரை சார்ந்த மணிகண்டன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஊழல் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, சிபிஐ இயக்குனர், இணை இயக்குநர் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக FIR பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
குஜராத் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற அளவுக்கு NLC நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது? என்று அலசி பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. NLC நிர்வாக இயக்குனராக பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி என்பவர் இருந்து வருகிறார். தலைமை பொது மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 350 நபர்களை தேர்வு செய்த பிரசன்னகுமார், பணியாளர்களை தேர்வு செய்யும் NLC கேட் தேர்வு எழுதாமல் லேட்டரல் என்ட்ரி மூலமாக குஜராத் மற்றும் ஆந்திராவை சேர்ந்த பலரை பணிக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
361 கோடி ரூபாய் ஊழல்
இது ஒருபுறம் இருக்க, ஒடிசா மாநிலத்தில் தலபிரா தெர்மல் பவர் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் மற்றும் இடம் கொடுத்தவர்களுக்கு வீடு கட்டிய நிலையில், அதில் மட்டும் 361 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரிவித்தார்.
அனுமதி கொடுத்தது யார்?
இதனிடையே, NLCயில் இருந்து வெளியேறும் கழிவுகளை வைத்து கிராஃபைட் தயாரிக்கும் திட்டத்தை சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த எக்ஸிம் என்ற வங்கியில் பணத்தை வாங்க முயன்றதோடு, அதற்காக போலி ஆவணங்களை தயார் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரும் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NLCயில் இருந்து வெளியேறும் சாம்பலை ஒரு டன் 1 ரூபாய்க்கு எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனுடன் சேர்த்து 70 ஆயிரம் டன் செம்மண் எடுத்துள்ளதாகவும், இதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள விஷ்ணு பிரசாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக கூறினார்.
உள்துறை முதல் உயர்நீதிமன்றம் வரை
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை முதல் உயர்நீதிமன்றம் வரை சென்றதாக தெரிவித்துள்ள விஷ்ணு பிரசாத், ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விசாரணையை தொடங்கிய சிபிஐ, ஏன் அதனை நிறுத்தியது? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு காவல்துறை விஜிலென்சும் விசாரணையை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved