Also Watch
Read this
By: Web Team

அன்புமணிக்கு எதிரான 16 குற்றச்சாட்டு குறித்து, அவர் வரும் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பாமக நிர்வாகக் குழு, இன்று ராமதாஸ் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து ராமதாஸ் கூறி இருப்பதாவது;
வரும் 10ஆம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்றும், அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்க வேண்டும். அன்புமணி பதில் அளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் நடத்திய போதும் இருவருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், 2026ஆம் ஆண்டு வரை தலைவராக அன்புமணியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ராமதாஸ் மனதை புண்படுத்திய அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பில் 16 குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டன. இதற்கு விளக்கம் தர அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அன்புமணி தரப்பு பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், இன்று ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.