Also Watch
Read this
Posted on: Feb 13, 2026 08:49 AM
By: Manigandan Raja
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற தனது பொலிடிக்கல் பாம், எல்லாருடைய கூட்டணியிலும் தாறுமாறாக வெடிப்பதாக விஜய் பேசி உள்ளார். வெல்வோம் ஒன்றாக, வரும் WEALTH அனைத்தையும் பார்ப்போம் தனியாக என்பது தான் திமுகவின் கொள்கை என்றும் சாடி உள்ளார்.
ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை
தவெக நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது;
டிஎன்பிஎஸ்சி தேர்வை அறிவித்துவிட்டு உடனே ரத்து செய்துவிட்டார்கள். இது உலகத்துக்கே தெரியும். தேர்வை ரத்து செய்துவிட்டு தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லிவிட்டு, கடந்து போய்விட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இரவு - பகலாக படித்து கஷ்டப்பட்டு, எப்படியாவது அந்த வேலை நமக்கு கிடைக்காதா? என்று, எதிர்பார்த்திருந்த நமது தம்பி, தங்கைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அதை யாராவது யோசித்துப் பார்த்தீர்களா? ஒரு தேர்வை ஒழுங்காக நடத்தத் தெரியவில்லை. இதில், உலக நாடுகளுடன் போட்டி போடுகிறார்களாம்.
ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம்
நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கூறுங்கள், அனைவரும் தைரியமாக இருங்கள் என்று கூறுங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்முடைய ஆட்சி. அதனால் சமூக நீதிக்கான ஒரு நல்ல ஆட்சியை அமைப்போம். இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு, வெளிப்படையாக ஒரு தீர்வைக் காணுவோம்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு
விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் பேசும்போது ஒன்றை கூறினேன். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு. அந்த அரசியல் வெடிகுண்டு இப்போது அனைத்து கூட்டணியிலும் வெடித்துக்கொண்டு இருக்கிறது. தாறுமாறாக வெடித்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதறுகிறார், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எல்லாம் தமிழ்நாட்டில் ஒத்துவராது என்று கூறுகிறார்.
நம்முடன் நம் மக்கள் இருக்கிறார்கள்
அவர்களைப் பொருத்தவரைக்கும், ஜெயிப்பதற்கு மட்டும்தான் கூட்டணி. மற்ற அனைத்துக்கும் அவர்கள் தனி அணி. அவர்கள் மட்டுமே ஒரே அணி. வெல்வோம் ஒன்றாக, ஆனால்... வரும் வருமானத்தை எல்லாம் பார்ப்போம் தனியாக... என்று இருக்கிறார்கள். அதுதான் சீக்ரெட். புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நம்முடன் நம் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved