வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு பாக்கித் தொகையான 2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையில், இதுவரை 2 கோடியே 41 லட்சம் ரூபாய் வழங்கி இருப்பதாகவும், அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை 8 கோடி ரூபாய் செலவில் செய்திருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகை என்பது மக்களின் பணமே ஒழிய, அரசு பணம் அல்ல என்றும், மக்களின் பணத்துக்கு அரசு, அறங்காவலர் மட்டுமே என்றும் சுட்டிக் காட்டியது. தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாக்கி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, ஓராண்டாகியும், அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என்றும் குறிப்பிட்டனர். பாக்கி இழப்பீட்டு தொகை வழங்கியது குறித்து, நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, டிசம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதையும் பாருங்கள் - ”இழப்பீட்டு பாக்கி தொகையை உடனடியாக வழங்கிடுக”