Also Watch
Read this
Posted on: Feb 18, 2026 08:24 AM
By: Manigandan Raja
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இரு திராவிட கட்சிகள் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகிவிட்ட நிலையில், எதிர்வரும் தேர்தலில் யாருக்கு சீட் கிடைக்கும்? வெற்றி வாய்ப்பு யாருக்கு? சிட்டிங் எம்.எல்.ஏவின் நிலை என்ன? என்பன உள்ளிட்டவற்றை அலசி ஆராய்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி
மானாமதுரை தொகுதியில், திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், நாதகவும் தவெகவும் குறுக்குசால் ஓட்டுவது இரு கட்சிகளுக்கும் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியவரும். சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று மானாமதுரை. தனித் தொகுதியான மானாமதுரையின் எம்.எல்.ஏ.வாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசி பணியாற்றி வருகிறார். அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியை கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதி திமுகவிடம் தொகுதியை ஒப்படைத்தார் தமிழரசி. இந்த சாதனை வரும் தேர்தலிலும் நீடிக்குமா? அல்லது பழைய வரலாறு திரும்புமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழரசி இந்த முறை போட்டியிடவே கூடாது
அதிமுகவிடமிருந்த தொகுதியை எளிதாக கைப்பற்றிய தமிழரசி, அதனை தக்கவைக்க சிறுதுரும்பையும் கிள்ளிப்போடவில்லை என உள்ளூர் நிர்வாகிகள் குமுறுகிறார்களாம். கனிமொழி கோட்டா மூலம் சீட் பெற்றதால், இம்முறையும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று, அதீத நம்பிக்கையில் இருக்கிறாராம். ஆனால், இவருடன் மல்லுக்கட்டி வரும் அமைச்சர் தரப்பு தனது ஆதரவாளர்களில் ஒருவரை களமிறக்க கோதாவில் குதித்துள்ளதாம். அப்படி அவரால் முடியவில்லை என்றால் செந்தில் பாலாஜியால் அழைத்து வரப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடியை முன்னிறுத்தலாம் என, தீவிர ஆலோசனை சென்று கொண்டிருக்கிறதாம். எப்படியானாலும் தமிழரசி இந்த முறை போட்டியிடவேக் கூடாது என பெரியகருப்பண் தரப்பு மும்முரமாக வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
கண்டும் காணாமல் உள்ளார்
தொகுதியிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, எந்தவித வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளாத தமிழரசி, ஒப்புக்காக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவருவதாக கூறப்படுகிறது. வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது, இளையான்குடியில் மிளகாய் பதப்படுத்துதல் மையம் அமைப்பது, திருப்புவனம் பேருந்து நிலையம் கட்டித் தராதது, வீடியோகான் நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தராதது, அரசு கல்லூரி தொழில் கல்லூரி உள்ளிட்டவை அமைத்து தராதது என முக்கிய கோரிக்கைகளை கண்டும் காணாமல் உள்ளார் தமிழரசி.
யாருக்கு சீட் தருவது?
தமிழரசி மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று பிரகாசமாகியிருப்பதாக கருதப்படும் நிலையில், சீட் கேட்டு பலரும் கோதாவில் குதித்துள்ளனராம். கடந்த தேர்தலில் நின்று தோற்றுப்போன நாகராஜன் மீண்டும் சீட் கேட்க, தலைமையோ அவர் மீதுள்ள போக்சோ வழக்கை சுட்டிக் காட்டி திருப்பி அனுப்பிவிட்டதாக முணுமுணுக்கப்படுகிறது. முன்னாள் பஞ்சாயத்து சேர்மன் ஏ.சி.மாரிமுத்து, அதிமுக விவசாய பிரிவை சேர்ந்த குமரேசன் ஆகியோரும் வாய்ப்பு கேட்டு, எம்.ஜி.ஆர் மாளிகை கதவுகளை தட்டி வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கொள்கின்றனர். ஒருபுறம் நாதகவை சேர்ந்த சண்முகப்பிரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பணிகளை முடுக்கிவிட்ட நிலையில், புதிய வரவான தவெகவில் யாருக்கு சீட் தருவது? என்ற குழப்பம் முடிவுக்கு வரவில்லை என்கின்றனர் உள்ளூர் அரசியல் ஆர்வலர்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved