அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில், 96,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு, 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படாததால், ஒவ்வொரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தலா 5000 மூட்டைகளுக்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது காலதாமதமாகி வருகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் இதை பயன்படுத்தி, வெளி மாநில நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வைத்து வருவதாகவும் குற்றம் சாட்டி, விவசாயிகள் மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில்வே கேட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக தெரிவித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் வெளி மாநில வியாபாரிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தடுத்து நிறுத்த கோரியும், போலி சிட்டாடங்கலை பெற்று, வியாபாரிகள் வெளிமாநில நெல்லை விற்பனை செய்வதால், உள்ளூர் விவசாயிகள் பயிர்க் காப்பீடு பெற முடியவில்லை என்றும், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப கோரியும், விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.