தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புடைய, ஹைட்ரோபோனிக் கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் பெரிய அளவில் போதை கடத்தும் கும்பல், போதைப் பொருட்களை கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தாய்லாந்து நாட்டில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம் பெண், 28 வயது இளைஞர் ஆகிய இருவர், சுற்றுலா பயணிகளாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதை அடுத்து, இருவரையும் சுங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டனர். அவர்களது டிராலி டைப் சூட் கேஸ்களின் அடிப்பாகத்தில், ரகசிய அறை வைத்து, அதனுள் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பயணிகளின் சூட்கேஸ்களிலும் மொத்தம், 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. இதை அடுத்து, சுங்க அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.