Also Watch
Read this
By: Web Team

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிறப்பால் ஏற்ற தாழ்வு கூடாது எனக் கூறியதை திரித்து, தனது தலைக்கு சிலர் விலை வைத்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்பப்படும் செய்திகளில், ரீல் எது, ரியல் எது? என்பதை வெளிக் கொணர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "சமூக ஊடகச் சவால்களை எதிர்கொள்வது" குறித்த பயிற்சி பட்டறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சமூக வலைதளங்களில், இன்றைய தினம் அதிக பொய் செய்தி, வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மை எவ்வளவு வேகமாக செல்கிறதோ பொய் செய்தி மூன்று மடங்கு வேகமாக செல்கிறது.
இந்தியாவில் உள்ள பாசிச கும்பல், பொய் செய்திகளை பரப்புவதை அடிப்படை கொள்கையாக கொண்டு முழு நேர வேலையாக செய்து வருகிறது. பொய் செய்தி மூலம் மக்களை குழப்ப வேண்டும், அவர்களை மழுங்கடிக்க வேண்டும், அதனை நோக்கமாக வைத்து கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், பிறப்பால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது, பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது அப்படி ஒன்று இருந்தால் அதனை ஒழிக்க வேண்டும் என நான் பேசினேன்.
அதையும் திரித்து, இனப்படுகொலையை தூண்டுவதாக பொய் செய்தி பரப்பினார்கள். என் பேச்சை திரித்து நான் சொல்லாத விஷயத்தை கூறி, வதந்தியை பரப்பினார்கள்.
இந்த விவகாரத்தில் எனது தலையை கொண்டு வந்தால், 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என ஒரு சாமியார் கூறினார். இன்னொரு சாமியார் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என தலைக்கு விலை பேசினார்.
உனது பகுத்தறிவு, புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் ஏன் எதற்கு? என்று எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என பெரியார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உண்மை சரி பார்க்கும் குழுவினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அதனால் போலி செய்தி பரப்பக்கூடிய கும்பல், பதற்றம் அடைந்துள்ளது. போலி செய்தி பரவுவது குறைந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் வருவதில், எது Reel எது Real என்பதை நீங்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். களத்தில் நின்று மாணவர்கள் Warriors ஆக செயலாற்ற வேண்டும்.
பொய்கள் வீழட்டும், உண்மை ஓங்கட்டும், பொய் செய்தி அற்ற சமூகத்தை ஆக்குவோம்.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.