Also Watch
Read this
Posted on: Feb 13, 2026 08:14 AM
By: Manigandan Raja
பணத்திற்காக வாக்கை விற்க மாட்டோம் என்று, விஜய் முன்னிலையில், தவெக தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திமுக அரசின் 5,000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, காதில் விசிலை ஊதி அனுப்பிவிடுமாறும் விஜய் பேசினார்.
காதில் விசில் ஊதி அனுப்புங்கள் - விஜய்
சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது;
ஓட்டுக்கு யாரும் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிக்கொண்டு காதில் விசில் ஊதி அனுப்புங்கள். ஆனால், இளம் தலைமுறையினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாசாரம் மாற வேண்டும். பணம் கொடுத்தால் நீங்கள் ஓட்டு போட்டு விடுவீர்களா? நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
விஜய் முன் உறுதிமொழி எடுத்த தொண்டர்கள்
'எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது, எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்.
இனி, நீங்கள் கொள்ளையடித்த பணம் எல்லாம் குப்பையில்தான் போட வேண்டும். மக்களும் ஊழல் ஆட்சியை குப்பையில் போட போகிறார்கள்.
இளம் தலைமுறையினருக்கு வேண்டுகோள்
இளம் தலைமுறையினர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள். நாங்கள் எந்த கட்சியை ஒழிக்கவோ, அழிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ இல்லை, வெறுப்பு அரசியல் செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிரி யார்? என்று அறிவித்து, மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
ஒரு சதவீதம் வாக்கு வாங்க திராணி இருக்கிறதா?
அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று கேட்கிறார்களே? அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததைத் தாண்டி வேறு எதுவும் அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் இருந்துகொண்டு அரசியல் செய்யும் இவர்களுக்கு எல்லாம் ஒரு சவால்.
இவர்களால் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் வாக்கு வாங்க திராணி இருக்கிறதா? எங்களுக்கு அனுபவம் இல்லைதான், கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் இல்லைதான்.
இவ்வாறு விஜய் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved