அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியம் வரும் மே 23ஆம் தேதி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ள சிறப்பு நீதிமன்றம், ஆஜராகவில்லை என்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் மா.சுப்ரமணியமும், அவரது மனைவியும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இருவரும் ஆஜராகவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி வழக்கை மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.