Also Watch
Read this
Posted on: Jan 27, 2026 12:52 PM
By: Manigandan Raja
சோஷியல் மீடியா ERAவில் எது எப்போது டிரெண்ட் ஆகும் என கணிக்கவே முடியாது. அப்படி தான், அண்டார்டிகா பனி பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு பென்குயினின் வீடியோ வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது. சாதாரண பென்குயின் உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது எப்படி? டிரம்ப் போன்ற உலக தலைவர்களே பென்குயினை இணைத்து வீடியோ போடும் அளவுக்கு என்ன நடந்தது? பென்குயினின் வீடியோ சொல்லும் தத்துவம் என்ன? சாதாரண பென்குயின் INSPIRE பென்குயினாக மாறியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
உலகத் தலைவர் முதல்...
கடந்த மூன்று, நான்கு நாட்களாக சோஷியல் மீடியாவை திறந்தாலே பென்குயினின் வீடியோ தான் முதலில் வந்து நிற்கிறது. நிறைய பேர் ஒற்றை பென்குயின் மலையை நோக்கி செல்லும் புகைப்படத்தை தங்களது செல்போன் வால்பேப்பரில் வைத்தும் வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க அதிபர் டிரம்ப், பென்குயினுடன் நடந்து செல்லும் எடிட் புகைப்படத்தை வெள்ளை மாளிகை பதிவிட, பென்குயினாக இருந்து விடலாம் உலக பணக்காரரான எலன் மஸ்க்கும் கருத்து தெரிவித்திருந்தார்.
உள்ளூர் தலைவர்கள் வரை
இதேபோல, தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அந்த பென்குயினை அழைத்துக்கொண்டு தலைமை செயலகத்தை நோக்கி செல்வது போல புகைப்படத்தை பதிவிட்ட ADMK IT WING, PENGUIN NEEDS PEACE என பதிவிட்டது. அதோடு, விஜய்யின் த.வெ.க. ஆதரவு அக்கவுண்டுகளில் பென்குயினுடன் விஜய்யை ஒப்பிட்டு வீடியோ பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இப்படி, சாதாரண சமூக வலைதளவாசி தொடங்கி உலக தலைவர்கள், உள்ளூர் தலைவர்கள் வரை எல்லாரும் பென்குயினை புகழ்ந்து வீடியோ, புகைப்படங்களை பதிவிட காரணம் அந்த பென்குயினின் செயல் தான்.
Encounters at the End of the World
அதாவது, வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மன் இயக்குநர், அண்டார்டிகா பனி பிரதேசத்தில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆவணப் படத்தை இயக்கினார். Encounters at the End of the World என்ற ஆவணப் படத்தை எடுக்க 2007ஆம் ஆண்டு அண்டார்டிகா பனி பிரதேசத்தின் கடல் பகுதிக்கு சென்றிருந்தார் வெர்னர். அப்போது, அந்த இடத்தில் பென்குயின் கூட்டம் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. எல்லா பென்குயின்களும் கடற்கரையை நோக்கி செல்ல, கூட்டத்தில் இருந்த ஒரு பென்குயின் மட்டும் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலையை நோக்கி சென்றிருக்கிறது. அந்த பென்குயின் அப்போதே இறந்து விட்டதாக வெர்னர் ஹெர்சாக் கூறியுள்ளார்.
மீண்டும் மீண்டும்
பொதுவாக, பென்குயின்கள் கூட்டத்தோடு கூட்டமாக தான் வாழும். ஒரு பென்குயின் சென்றால் எல்லா பென்குயினும் பின்னாடியே செல்லும். ஆனால், ஒரு பென்குயின் மட்டும் தனியாக சென்றதை பார்த்த அந்த இயக்குநர் வெர்னர், தனியாக சென்ற பென்குயினை தூக்கி வந்து கூட்டத்தோடு சேர்த்திருக்கிறார். ஆனாலும், அந்த பென்குயின் மீண்டும் மீண்டும் தனியாக மலையை நோக்கி நடந்து சென்றிருக்கிறது.
ஏன் சென்றது?
பொதுவாக கடற்கரையோரம் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் தான் பென்குயினால் வாழ முடியும் என்ற நிலையில், எதற்காக அந்த பென்குயின் மட்டும் தனியாக சென்றது என்ற கேள்வி தான் தற்போது விவாதமாக மாறியுள்ளது. அதாவது, உணவு இல்லாத, உயிர் வாழ முடியாத அந்த பாதையில் பென்குயின் விருப்பப்பட்டு ஏன் சென்றது? என்ற கேள்வி தான் சமூக வலைதளவாசிகள் எல்லாருக்கும் எழுந்திருக்கிறது. அதோடு, பென்குயின் செயலை பொதுச் சமூகம் தங்களுடன் ஒப்பிட்டும் கருத்து கூறி வருகின்றனர்.
தற்போது வைரல், விவாதம்
சமீப கால இளைஞர்கள் முன்னோர்கள், வழி வந்தவர்கள் சொல்வதை கேட்பதை விட ஏதாவது வித்தியாசமான செயலை செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள்
என்ற நிலையில், அந்த பென்குயினுடன் தங்களது எண்ணங்களை பொருத்தி பார்த்து வருகின்றனர். கூட்டத்தோடு கூட்டமாக மந்தையில் இருக்கும் ஆடுகள் போல அல்லாமல் பென்குயின் போல தனித்து இருந்து விடலாம் என்ற கருத்துக்களையும் முன் வைத்து வருகின்றனர். பென்குயின் சோகத்தில் இருந்ததால் மரணம் நிச்சயமான பாதையை தேர்ந்தெடுத்திருக்கும் என நெகட்டிவ் கருத்துக்களை சிலர் கூறினாலும், இன்னும் சிலர் வெற்றியோ தோல்வியோ பென்குயின் போல முயற்சி செய்ய வேண்டும் என INSPIRE ஆகி வருகின்றனர். சுமார் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பென்குயின் வீடியோ தற்போது வைரலாகி பல விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved