மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என மத்திய அரசின் அறிவிப்பு,தமிழ்நாட்டு மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழக அரசு சூழலின் தீவிரத்தன்மையை உணர்ந்து சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல்,மத்திய அரசும் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.