பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அக்கட்சி தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குள் யாருக்கு அதிகாரம் என்ற மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை , வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக வரும் 15 ஆம் தேதி முதல் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் சந்திக்க உள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது.