காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா? என மக்கள் கண்ணீர் சிந்துவதாக குறிப்பிட்ட விஜய், திமுகவை விமர்சித்து கற்பனை திருக்குறளை கூறி கடுமையாக சாடினார். இன்னும் 2 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், த.வெ.க. மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சொன்ன செய்தி என்ன? விஜய் விமர்சனத்தின் மறு பக்கம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தவெக 3ஆம் ஆண்டு விழா கோலாகலம்தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தாமல் கட்சி அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். பனையூர் கட்சி அலுவலக வாசலிலேயே தலைமைச் செயலகம் போல நுழைவு வாயில் அமைக்கப்பட, மேள தாளங்கள் முழங்க கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பாடகர் வேல்முருகன் விஜய்யை புகழ்ந்து பாட்டு பாட, பாடலுக்கு விஜய்யும் நடனமாடி மகிழ்ந்தார். கண்ணீரை துடைக்க வந்த இயக்கம்இதனையடுத்து, நிர்வாகிகள் அனைவரும் பேசி முடிக்க, மைக்கை பிடித்த விஜய் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேச்சை தொடங்கினார். 1977ஆம் ஆண்டு ரேடியோவுக்கு எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டியை சுட்டிக்காட்டிய விஜய், 2017க்கு பிறகும், 2021க்கு பிறகும் அதே மாதிரி தமிழக மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பதாக கூறினார். அதாவது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், 2021ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் தமிழக மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள் எனவும், இந்த கண்ணீரை துடைக்க வந்த இயக்கம் தான் த.வெ.க. என்றார்.திமுக தான் முதற்றே உலகுஎம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது, என்னென்ன விமர்சனங்களை சந்தித்தார் என பட்டியல் போட்ட விஜய், எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் இப்படி கொந்தளிப்பது திமுகவின் இயல்பு எனவும், பவள விழா பாப்பாவுக்கு பழைய டப்பாவை உருட்டுவதை தவிர வேறு என்ன தெரியும்? என நக்கலாக கூறினார். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால், தீய சக்தியான திமுகவை பார்த்து அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம், திமுக தான் முதற்றே உலகு என எழுதியிருப்பார் எனவும் விஜய் சாடினார். திமுகவை விமர்சிக்கும் வகையில் விஜய் கூறிய அந்த கற்பனை குறளை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லி தொண்டர்கள் கேட்க, மூன்று முறை கூறினார்.விஜய் பேச்சு - எதிர்பார்ப்பு அடுத்ததாக கருத்து கணிப்பு குறித்து பேச தொடங்கிய விஜய், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது என்றதோடு, பாஜக தலைமையில் மற்றும் பலர் என குறிப்பிட்டார். தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாங்கள் தான் தலைமை என அதிமுக கூறி வரும் நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி என விஜய் குறிப்பிட்டது அதிமுகவை தவிர்த்து விட்டு பேசியது போல பார்க்கப்படுகிறது. அதோடு, திமுகவை வீழ்த்த தன்னால் மட்டுமே முடியும் என விஜய் கூறுவதும் அதிமுக இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்துகிறார் என்பதையே காட்டியது. அதோடு, தமிழகத்தில் மும்முனை போட்டி தான் என்ற விஜய், நாம் தமிழர் கட்சியின் சீமானை கணக்கிலேயே சேர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுக, திமுக மீது நேரடி விமர்சனம்கடைசியாக உரையை முடிக்கும் போது கூட, விசில் ஊதும் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும் எனக் கூறி தான் உரையை முடித்தார். வழக்கம் போல திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை புறக்கணித்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயன்றது மூன்றாம் ஆண்டு தொடக்க விழா உணர்த்திய செய்தியாக இருந்தது. திமுகவுக்கு எதிரான மாற்று சக்தி தாம் தான் என அடிக்கடி கூறும் விஜய், அதே நேரத்தில் அதிமுகவின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்.க்கு புகழாரம் சூட்டுவதிலும் தவறுவதில்லை. அதேபோல, 2017க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும், 2021க்கு பிறகு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலும் மக்கள் கண்ணீர் வடித்து கொண்டிருப்பதாக, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கும் இரு தரப்பையும் நேரடியாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். Related Link தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகல்