நடிகர் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்து விட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் என்கவுண்டரை ஆதரித்து இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க உத்தரவிடக்கோரி, பழனிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் என்கவுண்டரை ஆதரிப்பது தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது மியூட் செய்யவோ உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், மனு குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசு, சென்சார் போர்டு மற்றும் லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.