கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே இணையதள பதிவை பார்த்து திருமணம் செய்வதாக கூறி கடைசியில் கம்பி நீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே காரவிளையை சேர்ந்தவர் நற்சீசன். எல்.ஐ.சி. ஏஜென்ட்டான இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நாகர்கோவில் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு உள்ள நிலையில் தான், தனது தாயாரை கவனித்துக் கொள்வதற்காக இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த நற்சீசன் தனது விவரங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்சீசனிடம் தங்களை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கவருவதாகவும் கூறியுள்ளனர். அதன்படி மதுரையை சேர்ந்த நான்கு பெண்கள் வந்துள்ளனர்.அப்போது நற்சீசன் வீட்டில் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகளை அவர்களிடம் காண்பித்து விட்டு மேஜை டிராயரில் வைத்தார். திருடன் கையிலே சாவியை கொடுத்தது போல 2 நாட்கள் கழித்து பார்த்தபோது மேஜை டிராயரில் இருந்த நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதில் சுமார் 64 கிராம் நகைகள் காணாமல் போனதை அடுத்து நகையை தேடி பார்த்து கிடைக்காததால் பெண் பார்க்க வந்த நபர்களை தொடர்பு கொண்டபோது அவர்களுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.இதனால் தனது சந்தேகத்தை உறுதி செய்த நற்சீசன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது நகையை திருடி சென்றது மதுரை கும்பல்தான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி, கார்த்திகை யாயினி. முத்துலட்சுமி. போதும்பொண்ணு ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இணையத்தை பார்த்து திருமணம் செய்யும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருமணம் செய்வதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இணையத்தில் திருமணம் செய்து கொள்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.