தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாக, இபிஎஸ் வேதனை தெரிவித்து உள்ளார். பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கான பாதுகாப்பின்மை, தமிழ்நாட்டின் தின செய்தியாகி விட்டதாகவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி சம்பவம் இதுதொடர்பாக, இபிஎஸ் வெளியிட்ட பதிவு:தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தின் தின செய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும், மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கி உள்ளது.ஏன் சமாதானம் பேச வேண்டும்? பத்தாம் வகுப்பில் நன்கு படித்து, மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க, பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் போன பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி, சீர் கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது. குற்றவாளிகளைக் கண்டறிந்து, கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக எம்எல்ஏவும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்து விடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக எம்எல்ஏ வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என்று, திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?கடும் கண்டனம்வேடநத்தம் பாலியல் கொலை குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார். Related Link பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எங்கே? - விஜய் கேள்வி