சோகமும் துயரும் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், விஷமத்தனமான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: கரூரில் நடந்தது பெரும் துயரம். கொடும் துயரம், இதுவரை நடக்காத துயரம். இனி நடக்க கூடாத துயரம். மருத்துவமனையில் நான் நேரில் பார்த்த காட்சி, இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மன நிலையிலும், துயரத்திலும் தான் நான் இன்னும் இருக்கிறேன். தகவல் கிடைத்த உடன், மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு, உத்தரவுகளை பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனே கரூருக்கு போனேன்.குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதனை உடனடியாக வழங்கினோம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம். உண்மையான காரணத்தை அறிய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.சோஷியல் மீடியாவில், சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தொண்டர்களும், அப்பாவி பொது மக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும் அவர்கள் தமிழ் உறவுகள். சோகம், துயரம் சூழ்ந்திருக்கும் நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப கூடாது. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இது போன்ற நிகழ்ச்சி நடத்தும் போது, இனி வரும் காலங்களில் எத்தகைய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நமது கடமை. எனவே, நீதிபதி ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகு, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் உடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிமுறை வகுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.மனித உயிர்களே எல்லாவற்றிக்கும் மேலானது, மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடு, கொள்கை முரண்பாடு, தனி மனித பகை என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் மக்களின் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதும், நாட்டிற்கே முன்னோடியாக தான் இருந்து இருக்கிறது. இது போன்று எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நமது அனைவரது கடமை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின், வீடியோவில் பேசி உள்ளார்.