பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ராஜேஷ் குமார் சிங் திங்களன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எப்படி இருக்கிறது என மோடியிடம் பாதுகாப்பு அமைச்சக செயலர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. ஞாயிற்றுகிழமை பிரதமர் மோடியை சந்தித்த விமானப்படை தளபதி AP சிங், சனிக்கிழமை மோடியை சந்தித்த கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் தமது படைகளின் தயார் நிலை குறித்து விளக்கினர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ராணுவ தளபதிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மோடி, மும்படையினருக்கும் முழுமையான சுதந்திரம் அளிப்பதாகவும், ராணுவ நடவடிக்கை எந்த விதத்தில் இருக்க வேண்டும் என முடிவு செய்யுமாறும் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.