போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யத் தேவை இல்லை என்று, காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக பொறுப்பு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருந்தால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், வன்புணர்வு செய்யப்படாமல் காயம் அடைந்திருந்தால், அந்தக் காயத்தின் தன்மையை தெரிந்து கொள்ளும் அளவுக்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை கர்ப்பமாக இருக்கும் அல்லது பிரசவித்திருக்கும் பட்சத்தில், பாலியல் வன்முறைக்கு ஆளானோருக்கான படிவத்தில் முழு விவரங்களையும் நிரப்பத் தேவையில்லை என்றும், கர்ப்ப நிலை அல்லது பிரசவ விவரங்களை மட்டும் பதிவு செய்தால் போதுமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், குழந்தை அளித்த புகார் அல்லது பாதுகாவலரின் புகாரின் அடிப்படையில், பரிசோதனையின் தன்மை மற்றும் அளவைத் தீர்மானிக்கும் அதிகாரம் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கே உண்டு என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறிய கருத்தின் அடிப்படையிலும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், இந்த சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடந்த சாதாரண பாலியல் குற்றங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதால் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.