மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிவிப்பு:கட்சி விரோத நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு உள்ளார். கட்சியின் சட்ட, திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து இருக்கிறது. எனவே, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்து இருக்கிறேன். இதன்படி மல்லை சத்யா மதிமுக-வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அவர் என்னிடம் விளக்கம் அளிக்கலாம்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா, பொதுச் செயலாளரான வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. பரஸ்பரம் ஒவ்வொருவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.ஒரு கட்டத்தில், வைகோ தம்மை துரோகி என்று கூறியது குறித்து அதிருப்தி அடைந்த மல்லை சத்யா, சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், மல்லை சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.