எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால், இனி நாங்களும் திருப்பி அடிப்போம் எனப் பேசி திமுக - காங்கிரஸ் இடையிலான வார்த்தைப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மோதல் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு வேண்டும்அண்மைக்காலமாக, தமிழ்நாட்டில் ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒரு தரப்பினர் வாயிலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்குவதோடு, ஆட்சியிலும் பங்கு கொடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற மதுரை தெற்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் திமுக தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதே மொழியில் திருப்பி அடிப்போம்இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் குறித்துப் பேசிய மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி மீது 20 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதோடு, காங்கிரசுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால், அதே மொழியில் திருப்பி அடிப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தேர்தலில் நிற்கப்போவதில்லைமேலும், மல்லிகார்ஜுன கார்கேவிடம், நிச்சயம் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கச் சொல்லியிருப்பதாகவும், காங்கிரசுக்கு பலம் இல்லை என்று கூறியவர்களின் வாயை அடைக்கும் அளவில் பாக முகவர்கள் கூட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய், தங்களால் தான் தேர்தலில் வென்றதாக திமுகவினர் பேசுவதாகவும், இனி எம்.பி. எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைமை கணக்குதேர்தல் நெருங்கி வரும் வேளையில், வலுத்து வரும் இந்தக் கோரிக்கைகளுக்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைந்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் உறவில் ஒரு சிக்கல் உருவாகி ஒருவேளை காங்கிரஸ் பிரிந்து செல்ல நேரிடும் பட்சத்தில் மாற்று வாய்ப்பாக தவெகவை காங்கிரஸ் பரிசீலிப்பதாக கருதப்படுகிறது. இதுவரை தேர்தலையே சந்தித்திராத புதிய சக்தியான தவெகவுடன் இணைந்து விஜய் ஆதரவு அலையின் வலிமையை பரீட்சித்து பார்க்கலாம் என்ற நோக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் விஜய்க்கு பெருவாரியான ரசிகர்கள் இருப்பதால் அம்மாநில சட்டமன்ற தேர்தலிலும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என காங்கிரஸ் தலைமையே கணக்கு போடுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விமர்சனம் இதன் காரணமாகவே, ஏற்கனவே தேர்தல்களில் நிரூபிக்கப்பட்ட வெற்றிக் கூட்டணியில், கடந்த தேர்தல்களை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளைப் பெற்று, அதன் மூலம் மட்டுமே கட்சிப் பலத்தை நிரூபிக்க முடியும் என காங்கிரஸ் தலைமை கருதுவதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், நீண்ட காலமாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் போன்றோர் கருத்து தெரிவிக்க, அதற்கு திமுக சார்பிலும் வலுவான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் வெளிப்படுத்தி வருவதும், அதன் மூலம் திமுக தலைமைக்கு ஒருவித அழுத்தத்தையும் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கூட்டணியில் ஒரு புதிய சிக்கல்இந்த வார்த்தைப் போர் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைத்துவிடுமா? அல்லது தொகுதிப் பங்கீட்டிற்கான வெறும் அழுத்தம் கொடுக்கும் தந்திரமா? காங்கிரஸ் தொண்டர்களின் கொந்தளிப்புக்குத் தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது? என்ற கேள்விகள் கவனம் பெற்று வரும் நிலையில், 'இந்தியா' கூட்டணி ஒற்றுமையாகவே இருக்கிறது என திமுக மற்றும் காங்கிரசின் மேல்மட்டத் தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தாலும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியில் ஒரு புதிய சிக்கல் உருவாகி வருவதையே பார்க்க முடிவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். எச்சரிக்கையா? தேர்தல் கால கூட்டணிக் கணக்கா?இந்நிலையில், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களின் கூட்டணி தொடர்பான விமர்சனங்களை அந்த கட்சியின் தேசிய தலைமை இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இது திமுகவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா அல்லது தேர்தல் கால கூட்டணிக் கணக்கா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Related Link 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்