இஸ்ரோவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் மகிழ்ச்சியுடன் தகவல்களை தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் நாராயணன் பேசியதாவது: நாங்கள், சந்திரயான்-4 பணியை மேற்கொள்ளப் போகிறோம். இதில், வீனஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் இடம்பெறும். 2035ஆம் ஆண்டுக்குள், விண்வெளி நிலையத்தை இந்தியா உருவாக்கும். இதற்கான முதல் கட்ட பணி 2028ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்.எதிர் வரும் 2040ஆம் ஆண்டுக்குள், இந்தியா சந்திரனில் தரையிறங்கி, மீண்டும் அங்கிருந்து பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் வகையில் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து விடும்.அப்போது, இந்தியாவின் விண்வெளித் திட்டம், உலகின் மற்ற எந்த நாட்டையும் விட உயர்ந்த இடத்தில் இருக்கும். ககன்யான் திட்டத்திற்கு முன்னதாக, யாரையாவது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது பிரதமர் மோடியின் யோசனையாக இருந்தது. அவரது தொலைநோக்குப் பார்வை இன்று பெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி உள்ளார். அவருடன் சென்ற மூன்று விண்வெளி வீரர்களை மறக்க முடியாது. 2040ஆம் ஆண்டுக்குள் உலகின் அனைத்து முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கும் இணையாக இந்தியா இருக்கும். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.