வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி வரலாற்றை மக்கள் நிகழ்த்துவார்கள் என்று, தவெக தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்ட நன்றி கடிதத்தில் கூறி இருப்பதாவது:மதுரை தவெக மாநாட்டின் மகத்தான வெற்றி என்பது, நமது தொண்டர்களின் அயராத உழைப்பிலும், அர்ப்பணிப்பான பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமானது. மாநாட்டுக்கு திரண்ட தொண்டர்களின் கூட்டம், ‘மதுரையில் கடல் வந்து புகுந்தது போல’ இருந்தது. அந்தப் பிரமாண்டமான காட்சி, என் மனதில், கல்வெட்டாகப் பதிந்தது.இந்த அளவுக்கு, பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனதின் ஆழத்திலிருந்து கோடானுகோடி நன்றி.கபட நாடகம் மற்றும் பிளவுவாத சக்திகளை மக்கள் மனப்பூர்வமாக நிராகரித்து வரவேற்றது, நம் அரசியல் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கியுள்ளது. இனி சற்றும் சமரசமின்றி செயல்படுவோம். ‘செயல்மொழி தான் நம் அரசியலுக்கான தாய்மொழி’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.மாநாட்டை தொடக்கம் முதல் நிறைவு வரை ஒருங்கிணைத்த பொதுச் செயலாளர், உறுதுணையாக இருந்த கூடுதல் பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை நிலையச் செயலாளர், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் எல்லோருக்கும் மனமார்ந்த பாராட்டு.மாநாடு வெற்றிகரமாக நடைபெற மதுரை மாவட்ட செயலாளர்களான விஜய் அன்பன் கல்லானை, தங்கப்பாண்டி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வகித்த பங்கு சிறப்பானது. மாநாட்டில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட தமிழ்நாடு காவல் துறை, அரசு அதிகாரிகள், தனியார் பாதுகாப்புக் குழுவினர், ஊடகத் துறை நண்பர்களுக்கும் நன்றி. நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம் கடந்த 1967, 1977 தேர்தலில் நடந்த வரலாற்று வெற்றிகளைப் போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் நமக்காக அத்தகைய வரலாற்றை மீண்டும் நிகழ்த்துவார்கள். நல்லதே நடக்கும், நம்பிக்கையோடு பயணிப்போம், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.