வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதமும், ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 1950க்கு பிறகு 10 முறை சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 2005க்கு பிறகு, தற்போது 20 ஆண்டுகள் கழித்து, திருத்தம் மேற்கொள்ளபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.சென்னை தி.நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, தி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்திய நாரயணன் மற்றும் அதிமுக வழக்கறிஞர் விநாயகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான நிரஞ்சன் ராஜகோபால், முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.