கரூரில், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தின் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து, தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்த குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி, வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தவெக தலைவரான விஜய்யை கடுமையாக விமர்சித்தும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.