ஆந்திராவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையம் அமைப்பது குறித்து பிரதமருடன் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பேசி உள்ளார். டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் முன்னணி இடம் உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு மையம்-ஏஐ குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியிடம் விளக்கினார்.இதுதொடர்பாக சுந்தர்பிச்சை வெளியிட்ட பதிவு: விசாகப்பட்டினத்தில் முதன்முதலாக அமைக்கப்படும் கூகுள் ஏஐ மையம் குறித்த எங்கள் திட்டங்களை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு மைல்கல் வளர்ச்சி. இந்த மையம் ஜிகாவாட் அளவிலான கணினி திறன், ஒரு புதிய சர்வதேச நீர்மூழ்கி நுழைவு வாயில், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், பயனர்களுக்கு எங்கள் தொழில்முறை முன்னணி தொழில்நுட்பத்தைக் கொண்டு செல்லும். செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்களை துரிதப்படுத்துவோம். நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம். இவ்வாறு சுந்தர்பிச்சை பதிவிட்டுள்ளார். சுந்தர் பிச்சை உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு:ஆந்திரப் பிரதேசத்தின் துடிப்பான நகரமான விசாகப்பட்டினத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு மையத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. ஜிகாவாட் அளவிலான தரவு மைய உள்கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த பன்முக முதலீடு, வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் எங்களின் தொலைநோக்குத் திட்டத்தோடு ஒத்துப்போகிறது. தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் இது, ஒரு மிகப்பெரிய சக்தி. இது அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவை உறுதி செய்யும். நமது குடிமக்களுக்கு அதிநவீன கருவிகளை வழங்கும். நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உலகளாவிய தொழில்நுட்ப தலைவர் என்ற இந்தியாவின் இடத்தைப் பாதுகாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி, பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.