பீகாரில், காட்டாட்சி வழங்கிய ஆர்ஜேடிக்கு, முதல்கட்டத் தேர்தலில் மக்கள் 65 வோல்ட் மின் அதிர்ச்சியை அளித்துள்ளனர் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பீகார் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு, வரும் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், ராமரின் மனைவி சீதாதேவியின் பிறந்த ஊராகக் கருதப்படும் சீதாமர்ஹி-யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:முதல்கட்ட வாக்குப்பதிவில் பீகார், அற்புதங்களை நிகழ்த்தி உள்ளது. இதில், காட்டாட்சி வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சியை (65% வாக்குப்பதிவு) வாக்காளர்கள் வழங்கி உள்ளனர். பீகார் இளைஞர்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. பீகாரின் சகோதரிகளும், மகள்களும் தேசிய ஜனாயகக் கூட்டணிக்கு சாதனை வெற்றியை உறுதி செய்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய அரசாங்கத்தை நாங்கள் விரும்பவில்லை என்ற செய்தியை, அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.அன்னை சீதாவின் புனித பூமிக்கு நான் வந்ததை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு, அன்னை சீதாவின் இந்த பூமிக்கு வந்தேன். அடுத்தநாள் உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. அன்னை சீதாவின் ஆசியுடன், குழந்தை ராமருக்கு சாதகமாக, தீர்ப்பு இருக்க வேண்டும் என்று, நான் ரகசியமாக பிரார்த்தனை செய்தேன். அன்னை சீதா தேவியிடம் முன் வைக்கப்படும் பிரார்த்தனை எப்போதாவது தோல்வி அடையுமா? பிரார்த்தனை பலித்தது. உச்ச நீதிமன்றம் குழந்தை ராமருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.இன்று, அன்னை சீதாவின், இந்த புனித பூமிக்கு உங்கள் ஆசிகளை வேண்டி வந்துள்ளேன். அன்னை சீதாவின் ஆசியுடன் மட்டுமே பீகார், ஒரு வளர்ந்த மாநிலமாக மாற முடியும். இந்த தேர்தல், பீகார் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அதனால் தான் இந்த தேர்தல் மிகவும் முக்கியமாகிறது.பீகார் குழந்தைகளுக்கு, ஆர்ஜேடி என்ன செய்ய விரும்புகிறது? என்பதை அவர்களின் தலைவர்களின் பிரச்சாரங்களில் தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் பாடல்களையும் முழக்கங்களையும் கேளுங்கள், நீங்கள் திகிலடைவீர்கள்.ஆர்ஜேடியின் சமூக ஊடக தளங்களில், தாங்கள் கெள்ளையர்களாக மாற விரும்புவதாக, அப்பாவி குழந்தைகள் சொல்ல வைக்கப்படுகிறார்கள். பீகாரைச் சேர்ந்த ஒரு குழந்தை கொள்ளையராக வேண்டுமா அல்லது நன்கு படித்து மருத்துவராக, வழக்கறிஞராக, பொறியாளராக வேண்டுமா?பீகார் மாநிலத்தில், குழந்தைகள் கொள்ளையர்களாக மாறமாட்டார்கள். அவர்கள் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பொறியாளர்களாகவுமே மாறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.