சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திமுகவுக்கு எதிராக அதிமுக மேற்கொண்டு வரும் "விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி" என்ற பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த விலைவாசியுடன், திமுக ஆட்சியின் விலைவாசியுடன் ஒப்பிட்டு அதிமுக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அது எந்த அளவுக்கு கை கொடுத்திருக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. * திமுகவும், அதிமுகவும் மாறி மாறி தீவிர பிரச்சாரம்* வீடு வீடாக குடும்ப தலைவிகளை சந்தித்து அதிமுக பிரச்சாரம் * விலைவாசியை ஒப்பிட்டு ரசீது வழங்கும் அதிமுகவினர்சட்டமன்ற தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவுடன் திமுகவும், திமுகவை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிமுகவும் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக பல வழிகளில் வியூகம் அமைத்து வரும் அதிமுக, கடந்த ஜனவரி மாதம் விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. திமுக தரப்பில் மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் இலவச பயணம் என திட்டங்களை சாதனைகளாக பட்டியலிட்டாலும், விலைவாசி எக்கச்சக்கமாக ஏறியிருக்கிறது என்பதை கையிலெடுத்து அதிமுக பிரச்சாரம் செய்ய தொடங்கியது.* மின் கட்டணம், மளிகை பொருட்கள் விலை உயர்வை ஒப்பிட்டு பிரச்சாரம் * அதிமுக ஆட்சியில் இருந்ததை விட திமுக ஆட்சியில் விலையேற்றம் என புகார் * விலைவாசி உயர்வை சமாளிக்க முடியவில்லைஇந்த பிரச்சாரத்திற்காக, தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் அதிமுக நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் வீடு வீடாக சென்று குடும்ப தலைவிகளை சந்தித்து, கடந்த அதிமுக ஆட்சியில் பால், அரிசி, மளிகைப் பொருட்கள் விலை என்னவாக இருந்தது என்றும், தற்போதைய திமுக ஆட்சியில் என்னவாக இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு, அந்த கையடக்க பிரிண்டர் மூலம் ரசீதை பிரிண்ட் எடுத்து வீடுகளில் ஒப்படைத்து வருகின்றனர். தமிழகம் முழுக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் வீதம் சுமார் 16 லட்சம் குடும்பங்களை அதிமுக நிர்வாகிகள் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. * இதுவரை 16 லட்சம் குடும்பங்களை சந்தித்து அதிமுக பிரச்சாரம்* 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 30,000 அதிக செலவினம்* மின் கட்டணம் உயர்வு திமுக மீது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அதிமுகவினர்அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அதிகமாக செலவினம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். குறிப்பாக, மின் கட்டணம் உயர்வு என்பது மக்கள் மத்தியில் திமுக மீது எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என அதிமுகவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 100 யூனிட் இலவசம் என்பது நடைமுறையில் இருந்தாலும், மின் கட்டணம் கணக்கீடு செய்வதில் இருக்கும் குளறுபடிகளும், மின் கட்டணம் உயர்வும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.* மின் கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் மக்கள் மத்தியில் அதிருப்தி* பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்த அதிமுக முடிவு நேரடியாக குடும்பத் தலைவிகளை சந்தித்து, கடந்த ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் எவ்வளவு செலவு கூடியிருக்கிறது என விவரிப்பது அதிமுகவுக்கு கை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மூலம் கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை, இலவச பயணம் மூலம் சேமிப்பாகும் தொகை உள்ளிட்டவையும், விலைவாசிக்கே சரியாக இருக்கிறது என கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஆகையால், விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற பிரச்சாரத்தை இன்னும் தீவிரப்படுத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது. Related Link அறிவாலயத்தில் தஞ்சமாகும் OPS?