கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இரு பெண் எஸ்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். கரூர் வேலுச்சாமி புரத்தில், கடந்த 27ஆம் தேதி தவெகவின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. விஜய், தவெக கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோவுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி, தினேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை ஆவணங்களை உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றம் குறிப்பிட்ட சிறப்பு புலனாய்வு குழு தங்களின் விசாரணையை தொடங்க உள்ளனர்.இந்த குழுவில், சியாமளா தேவி, விமலா என்ற இரு பெண் எஸ்.பி.க்கள், 3 ஏடிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் கரூர் போலீசாரின் விசாரணை ஆவணங்களை பெற்று கொண்டு, தங்களின் விசாரணையை தொடங்க உள்ளனர். ஏற்கனவே கரூர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனத்தையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் விஜய் மீதும், தவெக மீதும் வைத்துள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வழக்கை தீவிரப்படுத்தியுள்ளது.இந்நிலையில் வழக்கு ஆவணங்கள், சிறப்பு புலனாய்வு குழுவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.