Also Watch
Read this
Posted on: Aug 07, 2024 09:13 AM
By: Rakesh Sharma

சென்னை: தவெக தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. ஜூன் 28ம் தேதி முதற்கட்ட விருது நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இன்று இரண்டாவது கட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி உட்பட 19 மாவட்டங்களில் இருந்து, சுமார் 740க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த விழாவில் முதலில் பேசிய விஜய், நீட் தேர்வுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கு விருதும் கல்வி உதவித் தொகையும் வழங்கத் தொடங்கினார் விஜய். குடும்பத்துடன் மேடையேறிய மாணவ, மாணவிகள் விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டதோடு, அவரை பற்றி கவிதைகளும் பஞ்ச் வசனங்களும் பேசி, விழாவின் வைப் குறையாமல் பார்த்துக்கொண்டனர். முதற்கட்ட விருது விழாவில் பெண் ஒருவர், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலின் வரிகளை மாற்றி பாடியது வைரலானது. அதேபோல், இன்றைய நிகழ்விலும் ஒரு சம்பவம் நடக்க, அதை பார்த்து விஜய்யே வெட்கத்தில் தெறித்து ஓடியது ட்ரெண்டாகி வருகிறது.
அதாவது மாணவி ஒருவருக்கு விஜய் விருது கொடுத்து முடிந்ததும், அந்த மாணவியின் அம்மா மைக்கை வாங்கி, ”தளபதி எங்க அண்ணா… உங்கள பார்த்ததும் எம்ஜிஆர் நினைவு வருகிறது. அதனால் இரண்டே இரண்டு வரிகள் மட்டும் பாடிக்கொள்கிறேன்” என்றார். அதோடு, எம்ஜிஆரின் இதயக்கனி படத்தில் இடம்பெற்ற “நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என பாடினார். அவர் பாடத் தொடங்கிய அடுத்த நொடியே மேடையில் நிற்க முடியாமல் விஜய் வெட்கத்தில் அங்கும் இங்கும் ஓடி ஒளிய, அரங்கமே அதிர்ந்தது. எத்தனையோ பஞ்ச் டயலாக், கவிதைகளுக்கெல்லாம் அசராத விஜய், இப்பாடலை கேட்டதும் செம வைப் ஆகிவிட்டார். இதுதான் கல்வி விருது விழாவில் கோல்டன் மொமண்ட் என இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதேபோல், இன்னொரு குட்டி சிறுமியும் விஜய்யை மேடையில் வைத்து க்யூட்டாக வம்பிழுத்தது வைரலாகி வருகிறது. அதில் தனது அக்காவுடன் விருது வாங்க மேடையேறிய சிறுமி, விஜய் முன் முட்டிப் போட்டு மலர் கொடுக்கிறார். இதனைப் பார்த்து இடுப்பில் கை வைத்தபடி விஜய்யும் க்யூட்டாக முறைத்துப் பார்க்க, அச்சிறுமி எழுந்திருக்கவே இல்லை. இதனையடுத்து விஜய்யும் அந்தச் சிறுமியின் முன் முட்டிப் போட்டு அவர் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டார். விஜய் இப்படி ரியாக்ட் செய்ததை பார்த்து அரங்கில் இருந்த ரசிகர்களும் தவெக நிர்வாகிகளும் கை தட்டி, விசில் அடித்து ஆர்ப்பரித்தனர். இந்த வீடியோவையும் டிவிட்டரில் வைரலாக்கி வரும் விஜய் ரசிகர்கள், செம்ம க்யூட் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved