பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நேபாளத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்திய துணை ராணுவப்படையும், நேபாளத்தின் ஆயுத போலீஸ் படையினரும் சேர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அடர்ந்த வன எல்லையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே ஆயிரத்து 700 கிலோ மீட்டருக்கும் அதிகமான எல்லை உள்ள நிலையில் பல கட்டமாக அங்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய துணைராணுவ படை கமாண்டிங் அதிகாரி கங்கா சிங், நேபாள பாதுகாப்பு படையுடன் இந்தியாவுக்கு நல்ல உறவு உள்ளதால் பயங்கரவாத தேடுதல் வேட்டை தீவிரமாக நடப்பதாக தெரிவித்தார். இந்திய நேபாள எல்லையில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.