இந்திய விமானங்கள் தங்களது வான்வெளியில் நுழைய விதித்த தடையை பாகிஸ்தான் நீட்டித்த நிலையில், இந்தியாவும் தடையை நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதனால், தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவும் தங்களது வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்தது. இந்த தடை மே 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு, அதாவது ஜூன் 23-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.