டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனத்த மழை வெளுத்து வாங்கியது. மோதி பாக், மின்டோ சாலை, துவாரகா மேம்பாலம், சாணக்யபுரி, சாந்திபத், தௌலா குவான் மற்றும் டெல்லி விமான நிலைய முனையம் 1 அருகே உள்ள பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மின்டோ சாலையில் தேங்கிய நீரில் கார் ஒன்று மூழ்கியதால் பரபரப்பு நிலவியது. மோசமான வானிலையால் 100 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன.