மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஏரியில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரி, சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 135 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், 6 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கும் வசதி உள்ளது. ஏரியின் மூலம் 2500 ஏக்கர் நேரடி பாசன வசதியும், மணிக்கணையாற்றின் மூலம் 2000 ஏக்கர் பாசன வசதியும் உள்ளது. ஏரியைச் சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ஏரியில் 116 ஏக்கர் அளவுக்கு, ஆகாய தாமரை படர்ந்து இருந்தது. கடும் துர்நாற்றத்துடன் நீரின் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஏரி தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பெருந்தோட்டம் ஏரியில், ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தற்போது ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.