சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள, இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. கல்லறைகள் அமைந்துள்ள இடத்தில் பன்னடுக்கு கட்டடம், வாகன நிறுத்துமிடம் கட்டப்பட இருப்பதால் இடையூறாக உள்ள கல்லறைகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதால் கல்லறைகளை 4 வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்ற மத்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மத்திய தொல்லியல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் என்.சதீஷ்குமார் அமர்வு தள்ளுபடி செய்ததோடு, தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது என மறுத்துவிட்டனர்.