தொடர் விடுமுறையை முன்னிட்டு, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை எழிலை கண்டு ரசித்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும், நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பூங்காவில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு புல்வெளி மைதானத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விளையாடி விடுமுறை நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.