பிரபல பாடகர் எஸ்பிபி-யின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடம் முன்னர், ரசிகர்கள் இசையஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் பின்னணி பாடகர், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடம் அமைந்துள்ளது. எஸ்பிபியின் 5ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து, ரசிகர்கள் எஸ்பிபி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தனர். எஸ்பிபி நினைவிடத்தில், கட்டுமான பணி காரணமாக, நினைவிடத்திற்குள் அனுமதி இல்லை என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் அஞ்சலி செலுத்த வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரசிகர்கள் சிலர், அவர் பாடிய பாடல்களை பாடி நினைவு கூர்ந்தனர். ஹைதராபாத் ரசிகர் சாந்தி ராஜ் என்ற இளைஞர், எஸ்பிபி மீது வைத்துள்ள அன்பால், எஸ்பிபி பாடிய 188 பாடல் வரிகளை எழுதி, மாலையாக தனது உடலில் அணிந்து வந்து மரியாதை செலுத்தினார். எஸ்பிபி நினைவிட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பிறந்த நாளில் திறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.