இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். கடந்த மார்ச் 17 ஆம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த 3 மீனவர்களையும், 26 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், 14 மீனவர்களையும் விடுதலை செய்த இலங்கை, அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள், அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.