தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில், பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் நடைபெறும் சாணியடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பல தலைமுறைகளாக நடந்து வரும் இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான ‘சாணியடி திருவிழா’ இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவிற்கு முதல் நாளான நேற்றே கோயிலின் பின்பக்கம் ஊர் மக்கள் சாணத்தை குவித்து வைத்திருந்தனர். இன்று காலை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில் நீராடச் செய்து, கழுதை மூலமாக கோயிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்தனர். அதன்பிறகு கோயிலுக்கு பின்புறம் குவித்து வைத்திருந்த சாணத்தை உருண்டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வு நடந்தபிறகு, பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பீரேஸ்வரரை வணங்கினர். இந்த வழிபாட்டினால் ஊர்மக்கள், கால் நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்கும் என நம்புகின்றனர். சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய்கள், பீடைகள் ஒழியும் என்றும், கும்டாபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த வினோதமான சாணியடி திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.