மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு, நிவாரணம் கோரி தமிழக முதல்வருக்கு, மயிலாடுதுறை விவசாயிகள் பதிவு தபால் அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி, தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை அஞ்சலகத்தில் இருந்து விவசாயிகள், பதிவு தபால் அனுப்பினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.16, 17, 18ஆம் தேதிகளில் பெய்த கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. இது சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்து, ரூ.62 கோடி விவசாயிகளுக்கு வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், தொகை வழங்கப்படாமல் கால தாமதமானதால், வேளாண்மைத் துறை செயலர், வேளாண்மைத்துறை இயக்குநர் ஆகியோரிடம் நேரில் மனு அளித்தோம். மயிலாடுதுறை அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக சாலை மறியல் போராட்டமும், மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாக தொகையை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் கலைந்து சென்றோம். இதுநாள் வரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இதுகுறித்து தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.