தவெக நிர்வாகியுமான பாபு மீது நடவடிக்கை பாயுமா : திமுக , அதிமுக ஆகிய கட்சிகளில் மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வி.எஸ். பாபு அண்மையில் விஜயை சந்தித்து தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில் இன்று சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பெரம்பூர் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டத்தில் பாபு பங்கேற்று பேசினார். அப்போது அங்கிருந்த இளம் தொண்டர்களை உசுப்பேற்றும் வகையில் உற்சாகமாக பேசிய பாபு ஒரு கட்டத்தில் தவெக- விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தூய்மை பணியாளர்கள் பணியின்போது விசில் அடித்து குப்பை பெற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தன்னுடைய பகுதியில் தன்னால் வேலைக்கு வைக்கப்பட்ட ஒரு தூய்மை பணியாளர் விசில் அடிக்காமல் குப்பை வாங்கியதாகவும் , அப்போது விசில் அடிக்காவிட்டால் உன்னை நான் உதைப்பேன் டா என்று மிரட்டி விசில் அடிக்க வைத்ததாகவும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்த மேடையில் பாபு பெருமிதத்துடன் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலம் முதலே சென்னை மாநகராட்சியில் விசிலுக்கு மாற்றாக விழிப்புணர்வு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு குப்பை பெறப்படுகின்றது. இந்நிலையில் உண்மைக்கு மாறான தகவலை சொன்னது மட்டுமல்லாமல் அப்பாவி தூய்மை பணியாளரை ஒருமையில் பேசி மிரட்டியதாக மேடையில் கூறி புளகாங்கிதம் அடைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் தவெக நிர்வாகியுமான பாபு மீது நடவடிக்கை பாயுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Related Link திடீரென பேச்சை நிறுத்தி கண்கலங்கிய விஜய்