அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 1,00,008 வடைகள் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் நாமக்கல் ஆஞ்சநேயர்.மார்கழி மாதத்தில், அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியான இன்று 1,00,008 வடை மாலைகள் சாத்தப்பட்டன. அதிகாலை சரியாக 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோட்டை சாலை முழுவதுமே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.