தமிழக காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஏற்படாதது ஏன்? எனவும் உயர்நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறைக்கைதி ஜாகிர் உசேனுக்கு ஏற்பட்ட கை- கால் முறிவுக்கு உரிய சிகிச்சை வழங்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து விளக்கம் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட காவலர்கள் வேலை இழக்க நேரிடும் என எச்சரித்தனர்.