சிறுவாபுரி முருகன் கோயிலில், செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக, 6 வாரங்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இன்றும், சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து, காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் நுழைந்து, சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு பணியில் போதிய காவலர்கள் இல்லாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.