அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக, தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள தொடக்கப் பள்ளியில், காலை உணவுத்திட்ட விரிவாக்க விழா இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:கல்வி, அறிவை வழங்குவதாக மட்டும் இருக்கக் கூடாது; வயிற்றுப் பசியை போக்க வேண்டும். நீதிக் கட்சி ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காமராஜர் ஆட்சியில், மதிய உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில் காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் அரசு தொடங்கியுள்ளது. நான் ஆட்சி பொறுப்பு ஏற்ற சில நாட்களில் சென்னை அசோக் நகர் பள்ளிக்கு சென்றபோது, ’மாணவர்களிடம் என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டபோது டீ, பன் சாப்பிட்டு வந்ததாக கூறினார்கள். இதனை மனதில் வைத்து தான் காலை உணவுத் திட்டத்தை அரசின் கொள்கையாக அறிவித்தேன். ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை செலவு என்று சொல்ல மாட்டேன். ஒரு சமூக முதலீடாகவே பார்க்கிறேன். எதிர்காலத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ் சமூகத்திற்கு தரப்போகும் முதலீடு இது.தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை நம்பி அவர்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்துள்ளது. மாணவர்கள் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சி, உயர்வுக்கு பணியாற்றினால் அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி.இந்த திட்டத்தால், டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரித்து உள்ளது; ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது.கனடா போன்ற வளர்ந்த நாடுகள் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன. மேலை நாடுகளுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். எனது குறிக்கோள், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக மாற வேண்டும். தமிழக மக்கள் அனைத்து வகைகளிலும் முன்னேற வேண்டும் என்பது தான்.இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புவது குழந்தைகளுக்கு சமைக்கும் தாய்மார்களுக்கு தான். உங்கள் பணியை சிறப்பாக தொடர வேண்டும். மாணவர்கள் நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக படியுங்கள், நன்றாக விளையாடுங்கள், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.