அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா, கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்த ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5ஆம் நாள் திருவிழாவில் குடவருவாயில் தீபாராதனையும், 7ஆம் நாள் திருவிழாவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பர பவனியும், மாலையில் சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி, சிவன் அம்சமாக சப்பரத்தில் எழுந்தருளியும் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து 8ஆம் நாள் திருவிழாவில், சுவாமி சண்முகர் காலையில் வெள்ளை சாத்தி, பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலாவும், மதியம் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி, பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தார்.விழாவின் சிகர நிகழ்ச்சியாக, 10ஆம் நாள் திருவிழாவில் திருத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து திருச்செந்தூர் முருகனை வழிபட்டனர்.