சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறவுள்ள கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே தேர்தல் ஆணையத்திற்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தல், செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.